12-முதல் 15-நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், சவுரிபாளையம் அருகே கடந்த 15-நாட்களுக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவை சவுரிபாளையம் அருகே கடந்த 15-நாட்களுக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கோடைக்காலத்தில் 12-முதல் 15-நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கோவை சவுரிபாளையம் அருகே கடந்த 15-நாட்களுக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அரசு அதிகாரிகளிடமும், மாமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கான தீர்வு ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா சேரலாதன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியின் 50-வது வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு, சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் நகரப்பகுதிகளில் 5-நாட்கள் இடைவெளியிலும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் 12- முதல் 15-நாட்கள் இடைவெளியிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில் பழைய 60-வார்டுகளில் 24-மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் 80-சதவீதம் நிறைவடைந்துள்ளது. இருந்த போதும், நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் 5-நாட்கள் இடைவெளியில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நகரின் பிற 40-வார்டுகளிலும், மக்கள் குடிநீர் வரும் தினங்களில் பணிக்கு செல்லாமல் தண்ணீர் பிடிக்க காத்திருக்கும் நிலையே நிலவுகிறது.
இந்நிலையில், கோவை புலியகுளத்திலிருந்து வரதராஜபுரம் செல்லும் சாலையில், சவுரிபாளையம் முதல் உடையாம்பாளையம் வரை உள்ள சாலையில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 15-நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தற்போது கோடைக்காலமும் துவங்கியுள்ள நிலையில், குடிநீருக்காக மக்கள் இன்னலுக்கு ஆளாகும் நிலையில், குடிநீர் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் தேங்கும் இந்த குடிநீர், சாக்கடையாக மாறிவிடுவதால், குடிநீரில் சாக்கடையில் கலக்கும் அபாயம் உள்ளது.

மேலும், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு இருப்பதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் நிலையும் உருவாகியுள்ளது.

தேங்கியுள்ள நீரை வாகனங்கள் கடக்கும் போது, சாலையில் செல்வோர் மீது தெறித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் நீர் தேங்கும் சாலைகள் பள்ளமாகி, வாகனங்களை இயக்க முடியாத நிலையும் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோடைக்காலத்தில் மக்கள் தண்ணீருக்கு ஏங்கும் நிலை உருவாகும் முன்பாக இந்த குழாய்களை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, சூலூர் செல்லும் இந்த பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்ய, முழுமையாக நீரோட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும், இதனால் சூலூருக்கு குடிநீர் செல்வது தாமதமாகும் என்பதால், சரியான நேரத்தில் உடைப்புகள் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.
இன்று காலை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம் நடந்த போது, குடிநீர் பிரச்சினையைச் சீராக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களின் அழைப்புகளை எடுப்பதில்லை என மண்டல தலைவர் இலக்குமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களின் அடிப்படை தேவையான குடிநீரில் அதிகாரிகளும், மாமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இன்னும் இதற்கான தீர்வு ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா சேரலாதன் தெரிவித்துள்ளார்.