கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 150, 200 அடி அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
கோவை: கோவை சவுரிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா களைகட்டியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற விழாவில், பல்வேறு விதமான நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
இவ்விரு கோவில்களிலும், ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 21 நாட்கள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சித்திரை விழா கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சித்திரை திருவிழா உற்சாகத்துடன் கொண்டாபட்டு வருகிறது.
ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பூச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் சிலர் பெரிய கிரேன் மற்றும் வேன்களில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்தனர்.
குறிப்பாக, பக்தர்களில் ஒருவர் 150 அடி அலகும், மற்றொருவர் 200 அடி அலகும் குத்தி ஊர்வலமாக வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பின்னர், ஆற்றில் இருந்து கிளம்பிய சக்தி கரகம் உள்ளிட்ட 6 கிரகங்களும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.