அரசின் இந்த அறிவிப்பால், சிறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்திக்கும் என்றும் நடைமுறையில் உள்ள கொள்கையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோவை: தமிழகத்தில் ஒரு மெகாவாட்டுக்கு கீழ் இயங்கும் தொழில் நிறுவனங்கள் 'ஓபன் ஆக்சஸ்' முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்கும் வசதியை திரும்ப பெறுவது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரைவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால், சிறு, நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்திக்கும் என்றும் நடைமுறையில் உள்ள கொள்கையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (SISPA), கௌரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியதாவது:

கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக அரசின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தொலைநோக்குப் பார்வையுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனை கருதி, ஒரு மெகாவாட்டுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் "ஓபன் ஆக்சஸ்" முறையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க சட்ட திருத்தம் கொண்டு வந்து சமநிலை ஏற்படுத்தினார்.
"தமிழகத்தில் சிறு தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்படும்."
இன்றைய சூழ்நிலையில், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கினால் ஒரு யூனிட்டுக்கு 80 பைசா சேமிக்க முடியும். இதனால், தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மிகவும் பயனடைந்து வளர்ச்சியடைந்தன. இந்நிலையில், கடந்த 2018 ஏப்ரல் 17ஆம் தேதி நடைமுறையில் இருந்த இந்த கொள்கையை திரும்பப் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி மேற்கண்ட அரசாணையை நடைமுறைப்படுத்த ஒரு வரைவு அறிவிப்பு வெளியிட்டது. அவ்வாறு கொள்கையில் மாறுதல் செய்யப்பட்டு விட்டால், தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து பொருளாதார நஷ்டத்தைச் சந்தித்து, தொழில் முடங்கும் நிலை நேரிடும்.
உதாரணமாக, ஒரு மெகாவாட்டுக்கு கீழ் இயங்கும் நூற்பாலையில் 48 லட்சம் ரூபாய் வரை உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே, தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடைமுறையில் ஒரு மெகாவாட்டுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கலாம் என உள்ள கொள்கை முடிவை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும், என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (TECA) தலைவர், அசோக் கூறியதாவது:

ஒரு மெகாவாட்டுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்கும் வகையில் 2010 ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தால் தமிழகத்திலுள்ள அனைத்து சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் 2018 தமிழக அரசு "ஓபன் ஆக்சஸ்" முறையில் ஒரு மெகாவாட்டுக்கு கீழ் உள்ள தொழில் நிறுவனங்கள் மின்சாரத்தை வாங்கும் வசதியை திரும்பப் பெற வெளியிட்ட அரசாணையை, தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்த ஒரு வரைவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் சிறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். எனவே, தமிழக அரசு நடைமுறையில் உள்ள கொள்கை முடிவை, தொடர்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள கொள்கையை திரும்பப் பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, இதை தொடர்ந்து அமல்படுத்த வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு கூறியதாவது:

ஒரு மெகாவாட்டுக்கு கீழ் இயங்கும் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவதால் ஒரு யூனிட்டுக்கு 80 பைசா சேமிக்க முடிகிறது. தற்போது, இந்த கொள்கையை திரும்பப் பெறுவதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடைமுறையில் உள்ள கொள்கையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.
"சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்."
இது குறித்து எங்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான (TANSTIA) துணைத் தலைவர், சுருளிவேல் கூறியதாவது:

ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க உதவும் நடைமுறையிலுள்ள கொள்கையால், தமிழகத்திலுள்ள நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகுந்த பயனளித்து வருகிறது.
ஏற்கனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு தமிழக அரசு நடைமுறையில் உள்ள கொள்கையை திரும்ப பெற்றால் மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள கொள்கை தொடர தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர், சிவசண்முக குமார் கூறியதாவது:

மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, பவுண்டரி தொழில் நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு மெகாவாட்டுக்கு கீழ் ஒப்பந்த முறையில் தனியாரிடமிருந்து மின்சாரம் பெற அனுமதிக்கும் சட்ட திருத்த கொள்கையை திரும்பப் பெற்றால், பவுண்டரி தொழில் நிறுவனங்கள் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
"மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, பவுண்டரி தொழில், நிறுவனங்கள் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது."
தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பவுண்டரி தொழிற்சாலைகளில் சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் (OSMA) நிர்வாகி, அருள்மொழி கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஓபன் எண்ட் மில்களில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர பிரிவைச் சார்ந்தது ஆகும். எனவே, ஒரு மெகாவாட்டுக்கு கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்கள் தனியாரிடமிருந்து ஒப்பந்த முறையில் மின்சாரம் பெற வழங்கப்பட்டு வந்த சலுகை ரத்து செய்யப்பட்டால் தொழில் துறையினர் மிகுந்த நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.