கோவை வனக் கோட்டத்தில், வன உயிரினங்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள குழு சார்பில் இன்று விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய தமிழக குழு ஒன்றை அமைத்துள்ளது.
அந்த குழு சார்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, குழுவின் தலைவரும், கூடுதல் தலைமை வன பாதுகாவலர் ஐ அன்வர்தீன், வன பாதுகாவலர் பத்மா சமர்த்தா மற்றும் குழுவின் உறுப்பினரான "ஓசை" சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர் கந்தசாமி, தற்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகமாகியுள்ளது. குறிப்பாக, காட்டு பன்றிகள் அளவுக்கு அதிகமாக குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை, சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சிக்கி இறந்ததால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்ள வன விலங்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, மின்வேலியில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்தால், அதனை விபத்தாக கணக்கிட்டு, விவசாயிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட போதியளவு வனப் பணியாளர்கள் இல்லை. அதே போல், யானை தாக்கி உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு வழங்கப்படும் 4 லட்சம் ரூபாய் நிதி உதவி போதுமானது அல்ல. அதனை உயர்த்தி வழங்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
மேலும், தடாகம் பள்ளத்தாக்கில் மண் எடுப்பதற்கு தடை உள்ளதால் அந்த பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும் இந்த தடையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.