எப்.சி தாமதமானால் 10-நாட்களுக்கு 50-ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50-ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த கோரி வடக்கு போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து சட்டங்களை மறுசீரமைப்பு செய்ததைக் கண்டித்து, நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சங்கங்கள் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகக் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சிஐடியுவின் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, ஆன்லைன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிறு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது எனவும் எப்.சி செலானுக்கு 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் என 100 மடங்கு கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் எப்.சி தாமதமானால் 10 நாட்களுக்கு 50 ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
முற்றுகையில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.