மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறிவது போன்ற பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறைகள் வழங்கினார்.
இதேபோல், மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.33-க்குட்பட்ட பியூன்ஸ் காலனி, டேங்க் ரோடு ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல குழு தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், 33-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.9-க்குட்பட்ட விளாங்குறிச்சி, கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள வாய்க்காலை நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.