உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான விஷு பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை: கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்தஇரண்டு ஆண்டுகள் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே, மலையாள மக்கள் விவசாயம் செழிக்கவும் மக்கள் மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் வாழ வேண்டும் என்று ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரளாவில் குருவாயூர், சபரிமலை, அம்பலப்புழா, சோட்டாணிக்கரை உள்ளிட்ட அனைத்து முக்கிய கோவில்களில் இன்று அதிகாலை முதல் விஷுக்கனி சிறப்பு வழிபாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, இரண்டாம் சபரிமலை என்று போற்றப்படும் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிகாலை முதல் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஐயப்பனை காண நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதே போல மக்கள் வீடுகளிலும் விஷுக்கனி மற்றும் விஷு கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூத்தோர்களை வணங்கி சிறுவர்கள் விஷு கை நீட்டம் பெற்றனர். உருளையில் பழ தானியங்கள் வைத்துவிளக்கேற்றி, கொடிமுண்டு, வெள்ளரிக்காய், கனிகொன்னை, வெள்ளி காசுகள் வழங்கி கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.