இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இறைவனை வேண்டுவது மிகுந்த மன நிம்மதியை அளிப்பதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.
கோவை: தமிழ் புத்தாண்டு திருநாளான சித்திரை ஒன்றாம் தேதியான இன்று மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று இந்த சுபகிருது ஆண்டுசிறக்கவழிபாடு செய்து வருகின்றனர்.
காலையில் எழுந்தவுடன், மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகை, பணம், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவையில் பிரசித்திபெற்ற கோவில்களான, புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கோவை காட்டூர் பகுதியில்பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில், சித்திரை முதல் நாளான இன்று மக்கள் அனைவரும் பொருளாதார போன்ற அனைத்து வகையான கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, விசேஷ நாட்களில் ஆலயங்களில் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடை இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இறைவனை வேண்டுவது மிகுந்த மன நிம்மதியை அளிப்பதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.