தொடர்ந்து தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
கோவை: குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் ஆனந்தன் கூறும்போது:-
கடந்த 4 ஆண்டுகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மீதான தரவுகள் முழுமையாக கிடைக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டாலும் அந்த ஆவணங்கள் ஏதும் இல்லை என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை என தெரிவித்தார். அதேபோல் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டங்கள் சட்டப்படி மாவட்ட அளவில் காலாண்டுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும்.
மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் முறையாக செய்யவில்லை. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிப்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் உணவு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஏழு நாட்களுக்குள் சேதத்திற்கு உடனடி நிவாரணம் பணம், பொருள் தங்குமிடம் உள்ளிட்டவை வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் ஓய்வூதியம், ஒரு மாதத்திற்குள் வீடு குடி நீர் மற்றும் நிலம், மூன்று மாதத்திற்குள் அரசு வேலை, 6 மாதத்திற்குள் பொருளாதார மேம்பாடு ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக பொருளாதார ஏற்பாடுகள் குறித்த விவரங்களை மாவட்ட மற்றும் மாநில அளவில் இல்லை என்ற பதில்தான் பெறப்படுகிறது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
ஆனால் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருக்கிறது குறிப்பாகக் கடந்த ஆண்டு மட்டும் 21 ஒரு வழக்குகள் நீலகிரி மாவட்டத்தில் கிடப்பில் நிலுவையில் உள்ளது. அதேபோல் இம்மாதிரியான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை டிஎஸ்பி அளவிற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நேரில் சென்று புலன் விசாரணை செய்து அதற்கு உயர் அதிகாரிகள் கையொப்பம் மட்டுமே வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார். மேலும் பல்வேறு புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இழப்பீடு முழுமையாக சென்றடையவில்லை.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.29.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10.12 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் புறநகர் பகுதிகளில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம் ஒதுக்கப்பட்டு, ரூ.லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.34.56 கோடி ஆனால் 50 இலட்சம் மட்டுமே உரியவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்சோ வழக்குகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2021ல் தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 1,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 59 கொலை வழக்குகள், 8 கற்பழிப்பு வழக்கு, 135 போக்சோ வழக்கு, 52 கொலை முயற்சி டீ வைப்பது மூலம் இரண்டு வழக்கு சாதிப்பெயரை சொல்லி திட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது. ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். உயர் அதிகாரிகள் நேரடியாகச் சென்று வழக்குகளைக் கையாள வேண்டும். இந்த வழக்குகள் குறித்து தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்க வேண்டும். மாவட்ட அளவில் முதலில் தனி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.