உரிய அனுமதியின்றியும், மருத்துவர் பரிந்துரையின்றி வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்த மெடிக்கல் ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கணபதி, ரத்தினபுரி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், அதிகளவு போதைக்காக வலி நிவாரணிமாத்திரைகள் கை மாற்றி விட படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரத்தினபுரி போலீசார் கண்காணிப்பு குழுவை அமைத்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவை சக்தி பிரதான சாலை, ஆம்னி பேருந்து நிலையம் அருகே கையில் மாத்திரை பெட்டியுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர் கோவை கணபதி சுபாஷ் நகரைச் சேர்ந்த தனசேகரன் (28). என்பதும் இவர் கடந்த 5 ஆண்டுகளாக முறையான சான்றிதழ் இல்லாமல் மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தும் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக பெட்டி, பெட்டியாக இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த மாத்திரைகளை வாங்கிச் செல்லும் இளைஞர்கள் மற்ற இளைஞர்களுக்கும் சில்லறை முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
மாத்திரைகளை வாங்கி அதை குளுக்கோஸ் உடன் இணைத்து ஊசிகள் மூலமாக செலுத்தி போதைக்காக இளைஞர்கள் இதனை பயன்படுத்தி வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட இளைஞர்களுக்கு செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டு மாத்திரைகளை தனசேகரன் விற்பனை செய்து வந்துள்ளார்.
ஒரு பெட்டி மாத்திரையை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. தனசேகரனிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு அவரது மெடிக்கல் ஷாப்பில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான, 35 பெட்டிகளில் சுமார் 8,400 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் தனசேகரன் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு கோவை மாநகரம் முழுவதும் உள்ள மெடிக்கல் ஷாப்புகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள உள்ளதாக, உரிய அனுமதியின்றியும்,மருத்துவர் பரிந்துரையின்றி வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.