அதிமுக ஆட்சி மக்களால் 10 ஆண்டுகளுக்கு பின்பு தூக்கி ஏறியபட்டது போல, மத்தியிலும் 10 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம் வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து சென்னை வரை காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையினர் இன்று பாதயாத்திரையை துவக்கினர்.
இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி துவக்கி வைத்தார்.
கோவையில் இருந்து 550 கிலோ மீட்டர் 56 காங்கிரஸ் கட்சியினர் 18 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் பொறுப்பாளர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 56 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இந்த நடைபயணத்தை துவக்கி வைத்த பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், ஜி.எஸ்.டியில் குறைந்த பட்ச வரியாக விதிக்க வேண்டும் என மனித உரிமை துறையினர் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் உள்துறை அமித்ஷா, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றார் எனவும், இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனவும் தெரிவித்தார்.இந்தியா பல மொழிகளின் கூட்டு, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மொழிபிரச்சினையால் பிரிவினை ஏற்பட்டது எனக்கூறிய அவர், இந்தியாவிற்கு அந்த நிலை வரகூடாது என தெரிவித்தார். பா.ஜ.க அடிப்படைவாத கட்சி எனவும் இன, மொழி விவகாரங்களை கிளப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினை வேறு, இந்திய பிர்ச்சினை வேறு என தெரிவித்த அவர், இந்தியாவில் மக்கள் காலம் தாழ்த்திதான் முடிவெடுப்பார்கள், மோடி ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றது, அதிமுக ஆட்சி மக்களால் 10 ஆண்டுகளுக்கு பின்பு தூக்கி ஏறியபட்டது போல, மத்தியில் மாற்றம் 10 ஆண்டுகளுக்கு பின்பு வரும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.