கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற வெற்றி போல, வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறுவோம் என்று கோவையில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் அலுவலகம் துவங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான துவக்க விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் மாற்றத்தை தருவதாக கூறி மக்களை ஏமாற்றினாலும், அவர்களுக்கு மாற்றாக வேறு கட்சிகள் இல்லாமல் இருப்பதால் தான், மக்கள் ஏற்கனவே உள்ள கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது, என்றார்.
தற்போது, அந்த நிலை மாறி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாட்டால், மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வருகின்றனர். தமிழக முதல்வரே டெல்லிக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சியால் வளர்ச்சி கண்டுள்ள பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகளை பார்வையிட்டார்.
ஊழலில்லாத, கடன் இல்லாத, மக்களின் நலன் காக்கும் அரசாக டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் செயல்பட்டதன் விளைவாகவே பஞ்சாப்பின் வெற்றி என குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்கும், என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், தாமோதரன், ஜோசப்ராஜா, வேல்முருகன், மகளிரணி டெல்லி மேரி,கோவை மாவட்ட தலைவர் வாமன், ஒருங்கிணைப்பாளர் டோனி சிங் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.