கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையம் பின்புறம் கீரியிடம் இருந்து தப்பித்த பாம்பை பாம்புபிடி வீரர் பத்திரமாக மீட்டார். பின்னர், வனப்பகுதிக்குள் பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே பாம்பை, கீரி ஒன்று துரத்தி வந்ததால், அந்த வலையில் மாட்டிக் கொண்ட பாம்பை அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் ரயில் நிலையம் பின்புறம் ஏதோ சத்தம் வருவதை கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது, பாம்பும், கீரியும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள், கீரியை துரத்தி, பாம்பை தப்பிக்க உதவினர். ஆனால், எதிர்பாராத விதமாக வலையில் சிக்கிய அந்த பாம்பால், வெளிவே வர முடியாமல் தவித்தது. உடனே, பொதுமக்கள் சிங்காநல்லூரை சேர்ந்த பாம்பு பிடி வீரரும், வக்கீலுமான சித்திரன் (25) என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்திரன், வலையை அறுத்து அதில் மாட்டிக் கொண்டிருந்த பாம்பை பத்திரமாக மீட்டார். இதையடுத்து, பிடிப்பட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஓப்படைத்தார்.
பாம்பின் உடல் நிலையை சோதனை செய்து வனத்துறையினர், பின்னர் வனப்பகுதிக்குள் அதை பத்திரமாக விட்டனர். பின்னர், பாம்பின் உயிரை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு, வனத்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்திரன் கூறும்போது, நான் வக்கீலாக வேலை செய்து வருகிறேன். எனக்கு பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டதால், பாம்புகள் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். மேலும் பாம்புகளை மீட்பது எப்படி என்பதை கற்று கொண்டேன்.
பொதுமக்கள் வீடுகளில் பாம்பு புகுந்தால் எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். நான் உடனே அங்கு சென்று பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பேன். இதுவரை 200க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளேன், என்றார்.