மருத்துவமனை அறையை சுத்தம் செய்வது போல உள்ளே சென்று, ஏடிஎம் கார்டை திருடியதும், அதை வைத்து பல தவணைகளில் வைத்து பணத்தை எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று, உயிரிழந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி ரூ.8.67 லட்சம் பணத்தை திருடிய அசாம் மாநில ஊழியர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைசேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி யசோதா. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டஇவர், சிகிச்சைக்காக கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், யசோதாவின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக முருகசாமி கடந்த சில தினங்களுக்கு முன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, யசோதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, அதிலிருந்த சுமார் ரூ.8.5 லட்சம் ரூபாய் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, முருகசாமி அந்த பணம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 2021 மே மாதத்திற்கு பிறகு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தேகமடைந்த முருகசாமி உடனடியாக கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார், தனியார்மருத்துவமனையில் யசோதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது அறையை அடிக்கடி சுத்தம் செய்ய வந்ததாகக் கூறப்படும், அசாம் மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அதுல் ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நிலையில், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் யசோதாவின் ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து ரூ.8 லட்சத்து 67 ஆயிரத்து 710 ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்டனர். விசரானையில், யசோதா தனது ஏடிஎம் கார்டின் பின்னால் பாஸ்வேர்டை எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது.
இதை அறிந்த இருவரும், அறையை சுத்தம் செய்வது போல உள்ளே சென்று அந்த ஏடிஎம் கார்டை திருடியதும், அதை வைத்துபல தவணைகளில் ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.