பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவை மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் கோவில் திருவிழாக்களில் நாடகம் போடவும், மேடை நிகழ்ச்சிகள் நடத்தவும், அனுமதி வேண்டி அண்ணா மற்றும் கலைஞர் வேடமணிந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மனு அளித்தனர்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மேடை நடன கலைஞர் சங்கத்தினர் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் வேடம் அணிந்து "கோவையில் பல்வேறு இடங்களில் மேடை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், கோவில் விழாக்களுக்கும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் இதற்குக் காவல் ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அஜித் ராஜா அரசு அங்கீகாரம் பெற்ற சுமார் 8000 மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் உறுப்பினர்களாக எங்கள் சங்கத்தில் உள்ளனர் என்றும் இதுவரை எங்கள் சங்கம் கண்ணியமான முறையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் நாங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக covid-19 வைரஸ் தொற்று காரணமாக மிகுந்த வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் குழந்தைகளின் கல்வி செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திலிருந்து வரும் இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மேடை நடன கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும் மேடைகளிலும் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்துள்ள போதும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
எனவே காவல் ஆணைர் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாகக் கோவில் திருவிழாக்களிலும் மேடைகளிலும் எங்களுடைய சங்கத்தின் மூலம் நடன நிகழ்ச்சி நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார். பிற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கோவை மாவட்டத்தில் மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.