அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, முதியவரை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கோவை: தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய முதியவரை, பெண் திருமண தரகர் மற்றும் அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
கோவை பூமார்க்கெட் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. திருமண இடைத்தரகராக இருந்து வருகிறார். இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்ராஜ்(60) என்ற முதியவர் ஒருவர் அறிமுகமாகி, தனக்கு குடும்பம் இல்லாததால், மணப்பெண் தேவை என தெரிவித்துள்ளார்.
இதனால் தொழில்முறையாக அவருடன் திவ்யா பழகி வந்த நிலையில், அவ்வப்போது திவ்யாவின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இதனிடையே திவ்யாவிற்குப் பழக்கமான நபர்களிடம், தனக்கும் திவ்யாவிற்கும் தகாத உறவு இருப்பதாகவும், அவரை தான் தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தனக்கு இது போல் பலருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி வந்ததாகத் தெரிகிறது.
இத்தகவலை அறிந்த திவ்யா அதிர்ச்சியடைந்து இது குறித்துக் கேட்ட போது, தன்னை திருமணம் செய்து கொள்ள பால்ராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், பால்ராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் மக்களுக்கு உதவி செய்து வருவதாக ஏற்கனவே பால்ராஜ் இவர்களிடம் கூறியிருந்த நிலையில் திவ்யா மற்றும் உறவினர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அங்கு இருந்த பால்ராஜின் சட்டையை பிடித்து, இழுத்து வந்ததோடு, அவரை தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, பால்ராஜை விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.