தனது தாயின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக தான் அளித்த புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.
கோவை: உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை மீது புகாரளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீணா தனது அம்மாவைக் கடந்த 2020-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரது தாயார் உயிரிழந்த நிலையில் தனது தாயாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அம்மாவின் உடல் உறுப்புகளைத் திருடி விட்டதாகச் சந்தேகம் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேலும் இவருக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தான் அளித்த புகாருக்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், தனது அம்மாவை அம்மருத்துவமனையினர் கொலை செய்து விட்டதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், உட்படப் பலரிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அம்மருத்துவமனையிலிருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் புகார் தெரிவித்தார்.