டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்களின் விலை உயர்வு காரணமாக தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.

கோவை: தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 5,000 லாரி உரிமையாளர்கள் லாரிகளை விற்பனை செய்து தொழிலை விட்டு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்(CLOA) முன்னாள் தலைவர், கே.ஆர். ஆறுமுகம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாது என்றபோதும் நடுத்தர மக்கள் மற்றும் லாரி தொழில் செய்து வருபவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் லாரிகள் இருந்தன. தற்போது 15 ஆயிரம் லாரிகள் மட்டுமே உள்ளன. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று அல்லது இரண்டு லாரிகளை வைத்திருந்தவர்கள் டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட நெருக்கடி மற்றும் டயர் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாகத் தொழிலை நடத்த முடியாமல் லாரிகளை விற்பனை செய்துவிட்டு தொழிலை விட்டே சென்று விட்டனர்.
இன்றைய சூழலில் லாரி டிரைவர்கள் மற்றும் களீனர்கள் கிடைப்பதில்லை. தொழிலில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது தொழில் நடத்தி வரும் லாரி உரிமையாளர்கள் பலர் வேறு தொழில் செய்ய தெரியாத காரணத்தால் இதே தொழிலை நெருக்கடியிலும் நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.