இந்த விழாவில் கோவை கொம்பன்ஸ் அணியின் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு அவர்களுக்கு மேயர் கல்பனா நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
கோவை: தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் சார்பில் நடக்கும் தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியின் 2-ஆவது சீசன் வரும் 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையில் சென்னையில் உள்ள ஃபயர்பால் உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் கோவை கொம்பன்ஸ் அணி பங்கேற்கிறது. இந்த அணியின் அறிமுக விழா கடந்த 2-ஆம் தேதி கோவை சின்னவேடம்பட்டியிலுள்ள கேசிர்ஸ் ஆடிடோரியத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தார். மேலும், குமரகுருபர சுவாமிகள், கௌமார மடாலயம், திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, திமுக சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைச் செயலாளர் மணிசுந்தர் நல்லசுவாமி, திமுக தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் தமிழாமரை, தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் தலைவர்சிவக்குமார், பின்னணி பாடகர் அல் ரூஃபியன் மற்றும் ஊடகங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கேபிஒய் புகழ் நவீன் முரளிதர் தனது திறமையால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வித்தார். கோவை கொம்பன்ஸ் அணியின் உரிமையாளர் நகுல் பிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும், பேட்மிண்டன் வீரரான மணிசுந்தர் நல்லசுவாமி நன்றியுரையாற்றினார்.

அதோடு, இது போன்ற போட்டிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டுமென்று தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்திற்கு வேண்டுகோள் வைத்தார்.
கோவை கொம்பன்ஸ் அணிக்கென்று இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உருவாக்கிய ஆந்தம் பாடல் விழாவில் இசைக்கப்பட்டது. அல் ருஃபியனின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேயர் கல்பனா, குமரகுருபரர் சுவாமிகள் மற்றும் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் இணைந்து கோவை கொம்பன்ஸ் அணியின் "அடங்காத நம் காளை" என்ற ஆந்தம் பாடலை வெளியிட்டனர்.
இந்த பாடலுக்கு சாய் பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி பாடகர் அல் ருஃபியன் இந்த பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலானது ட்ரம்ஸ்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட உள்ளது.
ஸ்டார் ஆஃப் இந்தியா விருது பெற்ற கோவை கொம்பன்ஸ் அணியின் பயிற்சியாளர் பள்ளி மாணவர்கள் மற்றும் பேட்மிண்டன் வீரர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாளரை கண்டவறிவது மற்றும் அவர்களது வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு குறித்ததகவல்களை வழங்கினார்.
இந்த விழாவில் கோவை கொம்பன்ஸ் அணியின் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு அவர்களுக்கு மேயர் கல்பனா நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கோவை கொம்பன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனையான வர்ஷினி தன்னை தேர்வு செய்த கோவை கொம்பன்ஸ் அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த தமிழ்நாட்டு பேட்மிண்டன் சூப்பர் லீக் சீசனின் தனது முழு பங்களிப்பை வழங்குவேன் என்றும் கூறியுள்ளார்.
கோவை கொம்பன்ஸ் உரிமையாளர் சேதுபதி சக்திவேல், நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், சிறப்பு விருந்தினர்கள், வீரர்கள், பயிற்சியாளர், ஸ்பான்சர்கள், டிஜிட்டல் மீடியா குழுவினர், தயாரிப்புக் குழுவினர், கலைநிகழ்ச்சி கலைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் கோவை கொம்பன்ஸ் அணியுடன் பேட்மிண்டன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
