கோவையின் சாலை முதல் சாக்கடை வரை உள்ள, ஊழல்களை வெளி கொண்டு வர அறப்போர் இயக்கம் கண்காணிப்புக் குழுவாக செயல்படும் என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் அறப்போர் இயக்கத்தின் கோவை மாவட்ட துவக்கக் கூட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில் முழுமையான இ-டெண்டர் வேண்டுமென வலியுறுத்தபட்டது.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கூறுகையில் கோவை மாவட்டத்தில் நடக்கக் கூடிய அன்றாட ஊழல்களை வெளி கொண்டு வர அறப்போர் இயக்கம் கோவையில் செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் பேருந்து நிழல் குடையில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய அவர் கோவை மாநகராட்சியில் நிழற்குடை அமைத்ததில் ஊழல் நடந்ததாக செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பல ஊழல்களை அறப்போர் இயக்கம் சென்னையில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அவர் தற்போது கோவையில் நடைபெறும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வருவோம் என தெரிவித்தார். கோவையின் சாலை முதல் சாக்கடை வரை உள்ள, ஊழல்களை வெளி கொண்டு வர அறப்போர் இயக்கம் கண்காணிப்புக் குழுவாக செயல்படும் எனவும் கூறினார்.
கோவையில் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டனை பெற்றுத் தருவோம் எனவும் தெரிவித்தார்.
கோவையை தொடர்ந்து திருச்சி, மதுரை, செங்கல்பட்டு என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்டோ டிரைவர் முதல் ஐடி துறை வரை உள்ள பல்வேறு மக்கள் இந்த இயக்கத்தில் இணைய முன் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் நான் தெரிவித்த 15 புகாரில் இரண்டு புகார் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை மெதுவாகச் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
பேருந்து நிழற்குடை ஊழல் இந்த ஆட்சியிலும் தொடர்வதாக கூறிய அவர் கடந்த 10 மாதங்களில் நடந்த மூன்று ஊழல்களை வெளி கொண்டு வந்து மூன்று டெண்டர்களை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் மின்சார வாரியத்தில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வந்தோம் எனவும் மின்சார ஒழுங்குமுறை வாரியத்தில் நடைபெற்ற கோளாறுகளை வெளிக் கொண்டு வந்தோம் எனவும் கூறினார்.
திமுக அமைச்சர்கள் மீதும் இன்னும் சில ஊழல் புகார்கள் உள்ளதாகவும்மாதங்களில் எங்கள் ஆராய்ச்சிகளின் முடிவில் ஊழல் புகார்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரத்தில் விசாரணை முடியும் வரையாவது அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குகிறோம் என தெரிவித்து இருக்க வேண்டும் எனவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனகாண்டிராக்ட்கள் ஏன் பல ஆண்டுகள் தொடர்கிறது என கேள்வி எழுப்பிய அவர் இதை புதிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.