இது குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் நீட் பயிற்சி மையத்தில் உயிரிழந்த மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் வன்கொடுமை வழக்காக பதிவு செய்யவும் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி நீட் பயிற்சி மையத்தில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி சுவேதா (19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு அவரது நண்பர் யோகேஸ்வரனுடன் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும், காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸை சந்தித்து மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான எந்த ஆதாரம் இல்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தகவல் தெரிவிக்காமல் ஹாஸ்டல் வார்டன் இரண்டு மணி நேரம் கழித்து தகவல் கொடுத்தார்.
தாமதமாக தகவல் கொடுத்ததன் காரணம் என்ன? தற்கொலை செய்து கொண்ட அறை எதற்காக சுத்தம் செய்யப்பட்டது? இதனை வன்கொடுமை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுவேதாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மனு அளிக்க வந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சியினர் ஆகியோரும் உடனிருந்தனர்.