இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வேளாண் மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வோம், என்றார்.
கோவை: ஐசிடி தொழில்நுட்பம் மூலம் 80 லட்சம் விவசாயிகளிடம் சென்றடைவோம் என புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள கீதாலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆளுநரால் நியமிக்கப்பட்டு முதல்வரின் துணையுடன் பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் அகில இந்திய அளவிலான வேளாண் பல்கலைக்கழகத்தில் முதல் முதலாக பெண் துணைவேந்தராக பொறுப்பேற்றதற்கு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 70% மாணவிகள் படித்து வருவதாகவும், 52% பெண்கள் பணிபுரிவதாகவும் அவர்களை ஊக்கப்படுத்தும் படியாக எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது என கூறினார்.
நமது வேளாண் துறையில் பல சவால்கள் உள்ளது, பருவ காலநிலை மாற்றம் அதிகரித்து வருகிறது, இது மிகப் பெரிய சவாலாக உள்ளது எனவும் வேளாண்மைக்கு பயன்படும் தண்ணீர் மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் கூறிய அவர், மண் வளம் பாதிப்படைந்துள்ளதோடு நுண்ணுயிரிகளுக்கும் பாதிப்புகள் உள்ளது என குறிப்பிட்டார்.
நிலத்தில் எத்தனை உரம் போட்டாலும் விளைச்சல் அதிகரிப்பதில்லை, இவை அனைத்தும் சவாலாக உள்ளது, இவற்றை சரிசெய்ய ஆய்வை மேற்கொள்ள உள்ளோம் எனவும் இது ஒரு முக்கியமான செயல் திட்டமாக கொண்டு வர உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நேனோ டெக்னாலஜி, ட்ரோன் வழியாக பூச்சி மருந்து தெளித்தல், ரோபோ டெக்னாலஜி ஆகியவற்றின் மூலம் பல திட்டங்கள் உள்ளதாகவும் பாரம்பரிய திட்டத்தை நாகரிகத் திட்டத்துடன் இணைக்க திட்டங்களை வகுக்க உள்ளோம் எனக்கூறிய அவர் வேளாண் கல்வியில் மாணவர்களை வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற்ற பயிற்சி கொடுப்பதாகவும் மாணவர்களின் தேவைகளை தயார்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் புது ஐடியாக்களுக்கு மதிப்பளித்து அதை ஆய்வு செய்வோம் எனவும் அவர் கூறினார்.
சர்வதேசத் திட்டங்களையும் செயல்படுத்துவோம் எனக்கூறிய அவர், ஐ.ஐ டி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து எம்.ஓ.யு கையெழுத்திட்டு மாணவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார். உழவன் செயலியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளோம் எனவும் அக்ரி டெக் போர்டலை உழவன் செயலியில் லிங்க் கொடுத்துள்ளதாகவும் இதை பார்த்து விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் எனவும் கூறிய அவர், தக்காளி வெங்காயம் விலைகள் திடீரென குறைந்து ஏறுகிறது எனவும் ஆகவே எப்போது விதைக்க வேண்டும், எந்த நேரத்தில் என்ன மாதிரி விலைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள டெமிக் திட்டத்தை வைத்துள்ளதாகவும் இவை குறுஞ்செய்தி வழியாக விவசாயிகளை சென்றடைகிறது எனவும் அவர் கூறினார்.
இந்த ஐசிடி டூல் வழியாக 80 லட்சம் விவசாயிகளை நான்கு ஆண்டுகளுக்குள் சென்றடைவோம் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதற்கான திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.