தொடர் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்க, தமிழக வனத்துறை சார்பில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரர் அன்வர்தீன் தலைமையில், தனி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 11 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், உடல் நலக்குறைவால் பெரும்பாலான யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தாலும், மின் வேலியில் சிக்கியும், அவுட்டு காய் வெடித்தும் யானைகள் உயிரிழந்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
நவம்பர் 2021 - இரயில் விபத்து
கடந்த 2021 நவம்பரில் ரயில் மோதி கர்ப்பிணி பெண் யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது.
ஜனவரி 2022 - எலும்பு கூடு
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வால்பாறையில் உள்ள பழைய சத்துணவு கூட கட்டிடத்திற்குள் இறந்த குட்டி யானையின் எழும்புகளை வனத்துறையினர் கண்டெடுத்தனர்.
பிப்ரவரி - இரு பெண் மற்றும் ஒரு ஆண் யானை உயிரிழப்பு
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி காரமடை வனச்சரகத்தில் உடல் நலக்குறைவால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
அதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பின், கோவை தடாகம் பகுதியில் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது.
பின்னர், அடுத்த 5 நாட்கள் கழித்து பிப்ரவரி 12 ஆம் தேதி, தடாகம் அருகே உள்ள பட்டா நிலத்திற்குள் மேய்ச்சலுக்கு வந்த சுமார் 15 வயது ஆண் யானை, அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
அரசு தடையை மீறி, உயர் மின் அழுத்த கம்பியை வேலியில் பயன்படுத்தியதே யானை உயிரிழப்பிற்கான காரணமாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, தனியார் தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் நரேஷ் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இது வரை அவர்கள் தலைமறைவாக உள்ளதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் - 6 பெண் யானை, ஒரு ஆண் யானை இறப்பு
இதையடுத்து கடந்த மார்ச் 2 ஆம் தேதி பொள்ளாச்சி ஆனைமலை டாப் சிலிப் வனப்பகுதியில் பெண் குட்டி யானை ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதையடுத்து, வனத்துறையினர் குட்டி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சையளித்தனர். மேலும், கிராலில் அடைத்து சிகிச்சையளித்த நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் மாரச் 4, வால்பாறை மலநாடு தனியார் எஸ்டேட் பகுதியில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழந்துள்ளது.
அதே போல், கடந்த மார்ச் 16 ஆம் தேதி கோவை நரசிபுரம் கடுக்காய் பாறையில் சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.
மறுநாளே, மார்ச் 17 ஆம் தேதி தடாகம் மாங்கரை வனப்பகுதியில் 30 வயது ஆண் யானை இறந்த உடல் கண்டறியப்பட்டது.
பின்னர், மார்ச் 22 ஆம் தேதி உடல் சோர்வான நிலையில், வாயில் காயங்களுடன் முள்ளங்காடு வனப்பகுதியில் சுமார் 10 வயது பெண் யானை குட்டி கண்டறியப்பட்டது. சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி, யானை உயிரிழந்தது. விசாரணையில், அந்த யானை அவுட்டுக்காய் கடித்து வெடித்ததில் காயம் ஏற்பட்டு 21 நாட்களாக உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி சிறுமுகை வனச்சரகத்தில் ஆறு வயது பெண் யானை குட்டி பவானி நீர் பிடிப்பு பகுதியில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.
இறுதியாக, மார்ச் 31 ஆம் தேதி சிறுமுகை வனச்சரகத்தில் பெத்திக்குட்டை பகுதியில் 10 வயது பெண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இத்துடன், கோவை வனச்சரகத்தில் – 3, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் – 3, சிறுமுகை வனச்சரகத்தில் – 2, வால்பாறையில் – 2, டாப்சிலிப் – 1 என 11 யானைகள் இறந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு மட்டும் கோவை மாவட்டத்தில் மொத்தம், 22 யானைகள் உயிரிழந்தது. அப்போது யானை உயிரிழப்பை தடுக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களிலேயே, 11 யானைகள் உயிரிழந்துள்ளதால், இந்த ஆண்டு யானைகள் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்குமோ..? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியில் வன ஆர்வலர்கள்
இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறும் போது : தொடர்ந்து கோவையில் யானைகள் உயிரிழந்து வருவது வேதனையளிக்கிறது.
பெரும்பாலும், யானைகளின் இறப்பு உடல் நலக்குறைவால் தான் ஏற்பட்டுள்ளது என்றாலும், அதற்கான மூல காரணங்களை வனத்துறையினர் கண்டறிய வேண்டும். அதே போல், உயிரிழப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இயற்கைக்கு முரணாக ஏற்படும் வன விலங்குகள் உயிரிழப்புகளை தணிக்கை செய்ய உத்தரவு
இது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாலர் சுப்ரியா சாஹூ கூறும் போது : தமிழகம் முழுவதும் இயற்கைக்கு முரணாக உயிரிழக்கும் வன உயிரினங்கள் கண்டறிந்து தணிக்கை செய்ய மூத்த ஐ.ஏ.எப் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
முழுமையான தகவல்களை அனைத்தும் மாவட்ட அளவில் உள்ள வனத்துறை அதிகாரிகள் மூலம் களத்திற்கே சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
தொடர் யானை இறப்பு எதிரொலி - 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்தது தமிழக அரசு!
தொடர் யானைகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக வனத்துறை சார்பில் தனி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், செயல் திட்ட அலுவலர் பத்மா, துணை வனப் பாதுகாவலர் சமர்தா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் "ஓசை" காளிதாசன் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இனி யானைகள் உயிரிழக்கும் போது நேரடியாக களத்திற்கு சென்று, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து, உண்மை கள நிலவரங்களை பதிவு செய்யவுள்ளனர்
அதே போல், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு நேரில் சென்று இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.