பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதால் ஆலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கருத்து.
கோவை: வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வின் காரணமாக 2022ம் ஆண்டில் இந்திய பருத்தி தொழில்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது நாட்டின் பஞ்சு நூற்பாலைகள் குறிப்பாக தமிழ் நாட்டின் நூற்பாலைகள், வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வால், பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.
கடந்த அக்டோபர் 2020ல் பருத்தி பருவ கால தொடக்கத்தில், பஞ்சின் சராசரி விலை கண்டிக்கு (355 கிலோ) ரூ.37,000/- ஆக இருந்தது. அக்டோபர் 2021ல் கண்டிக்கு (355 கிலோ) ரூ.60.000/- ஆக உயர்ந்தது. தற்போது (29.03.2022) கண்டிக்கு (355 கிலோ) ரூ.97,000/- ஆக வரலாறு காணாத வகையில் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. அபரிமிதமான பஞ்சு விலை உயர்வினால், நூற்பாலைகள் அன்றாட தேவைக்குக்கூடப் பஞ்சு வாங்க முடியாத சூழலில் உள்ளது. இதனால் ஆலைகளில், உற்பத்தியை குறைக்கும் நிலை உருவாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறு மற்றும் நடுத்தர (SME) நூற்பாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பஞ்சு நுகர்வு குறைவதோடு, பருத்தி விவசாயிகளையும் பாதிக்கச் செய்யும் அபாய நிலை உருவாகும். இந்த பஞ்சு விலை உயர்வினால், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய வேலை வாய்ப்பை வழங்கும் ஜவுளித்தொழிலுக்கு, வேலையின்மைக்கு வழிவகுக்கும் என அச்சம் நிலவுகிறது.
விவசாயிகள் பருத்தியை அதிகம் விளைவித்தாலும், விவசாயிகளுக்கு அதற்குரிய நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. நமது நாட்டில், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது வருவாயை இரட்டிப்பு செய்ய உறுதுணை புரிந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி-க்கு எங்களது சங்கம் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தற்போது, இந்திய பருத்தி விளைச்சல் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஜின்னிங்க்கு வரும் அனைத்து ரகமான பருத்தியை, பல்வேறு பருத்தியுடன் கலக்கப்படுவதால், நூற்பாலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் நூற்பாலைகளுக்கு தரம் வாய்ந்த பஞ்சு கிடைப்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. பஞ்சு கொள்முதல் செய்ய, ஜின்னர்களை தொடர்பு கொண்டால், அவர்கள் எங்களிடம் பருத்தி கையிருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், தற்போதுள்ள பஞ்சு விலை கண்டிக்கு (355 கிலோ) ரூ.97,000/- இருந்து ரூ.50,000/- ஆக உடனடியாக சரிந்தால், விவசாயி, ஜின்னர்கள், நூற்பாலைகள், துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் என ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியும் பெரும் சிக்கலில் சிக்கித் தவித்துவிடும் அபாயம் ஏற்படும். இந்நிலை நீட்டித்தால், பெருவாரியான சிறு மற்றும் நடுத்தர (SME) நூற்பாலைகளின் நடைமுறை மூலதனம் (working capital) சுமார் மூன்று மாதங்களில் முற்றிலும் அரிக்கப்பட்டு, ஆலைகள் மூடும் அபாயம் ஏற்படும்.
இதுபோன்று பஞ்சின் விலை அபரிமிதமாக உயர்ந்த கொண்டே போவதால் நூல் விலையும் உயர்ந்து கோண்டு போகும். இதனால், பருத்தி வகையான துணி வகைகள் உள்நாட்டிலும், வெப்பமண்டல நாட்டிலும், (Tropical Country) அன்றாட தேவைகளுக்கு சமுதாயத்தில் அனைவருக்கும் சீரான துணிகளை குறைந்த விலையில் கிடைப்பது என்பது இயலாத காரியமாகி விடும். இதன் பாதிப்பு சமூகத்தில் இது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்.
ஆகவே, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் தாமதமின்றி உடனடியாக பஞ்சின் மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
இந்தியப் பருத்திக் கழகம் (Cotton Corporation of India-CCl) இறக்குமதி வரியின்றி பஞ்சை இறக்குமதி செய்து நமது நாட்டின் நூற்பாலைகளுக்கு நல்ல தரம் வாய்ந்த பஞ்சை நியாயமான விலைக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
MCX மற்றும் NCDEX கீழ் பஞ்சு வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
மத்திய அரசின் நேர்பார்வையில், பஞ்சு வரத்து மற்றும் விநியோகம் சரியான புள்ளி விவரங்களின் அடிப்படையில், நாட்டின் ஒட்டு மொத்த ஐவுளித்தொழினை சீராக நடைபெற வழிவகை செய்ப வேண்டும்.
அனைத்து தரப்பினரும் விவசாயி, ஜின்னிங், பஞ்சு வியாபாரிகள் போன்ற அனைவரும் புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இன்றைய கால சூழ்நிலையில் தரமான BT பருத்தியில், புதிதாக வந்துள்ள பருத்தி விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து, தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு மானியம் வழங்கி, அவர்களை ஊக்குவிக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் முனைப்புடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியை காப்பாற்ற வேண்டும் என எங்களது தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.