ஆரம்பப்பள்ளிகளிலேயே அதிகம் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், பல மாணவர்களுக்கு எழுதுவதிலும் வாசிப்பதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதாக தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் 90 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்டு 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலை, 13 நடுநிலை, 42 ஆரம்பப்பள்ளிகள் உட்பட 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 83 பள்ளிகளில் 850 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், 90 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும், கற்றல் கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்;
மாணவர்களுக்குப் பாடங்களை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், ஆரம்பப்பள்ளிகளிலேயே அதிகம் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்தார். பல மாணவர்களுக்கு எழுதுவதிலும் வாசிப்பதிலும் சிக்கல் தொடர்ந்து ஏற்பட்டு விடுகிறது.
தற்போது ஆசிரியர்களுக்கு பணிச்சுமை காரணமாக மாணவர்களுக்குத் தனிக்கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் கலந்தாய்வு முழுமையாக முடியும் பட்சத்தில் இது குறித்தான முடிவுகளை அலுவலர்கள் எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
தேர்வுகள் நெருங்கும் பட்சத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாகத் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.