மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.19 மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.19 மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (27.03.2022) குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, மின்சாரத்துறை அமைச்சா் வழிகாட்டுதலின் படியும், கோயம்புத்தூர் மாநகராட்சி மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையாளர், நகர் நல அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்துள்ள அனைவருக்கும் அன்பான காலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவை மாநகராட்சியில் தலா ஒரு நகர் நல மையம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 63-இடங்களில் ரூ.15.75-கோடி மதிப்பீட்டில் கட்டப்பட தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தற்போது கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, பொது மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தமிழக அரசு ஆணைப்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது.
இதில் முதல் முகாமில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 1040. முதல் முகாமில் 1359 பரிசோதனைகள் நடைபெற்றது. ஏழு நபர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்கள் அதில் 6 பேருக்குக் கண்புரை அறுவை சிகிச்சை, ஒருவருக்குச் சிறப்பு மூட்டுச் சிகிச்சை (Plate removal) மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டு முகாம்கள் வெள்ளக்கிணறு மற்றும் விளாங்குறிச்சி பகுதியில் இனிதே நடத்தப்பட்டு சுமார் 1500 பேர் பங்கு பெற்றுப் பயனடைந்தனர். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் முகாம்களில் 16 சிறப்பு மருத்துவர்களால் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதல் சிகிச்சை தேவைப்படுவோர் உயர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவர்.
நமது தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாநகராட்சி பகுதியில் இதுவரை 50 ஆயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட நபாகளுக்கு வீட்டில் இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மேலும், கலைஞரால் தொடங்கப்பட்ட முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு சிறப்பு உதவி திட்டம் மூலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நமது மாநகராட்சி பகுதியில் விரைவில் 63 நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ கண்காட்சியினை மேயர் நேரில் பார்வையிட்ட பின்னா், காப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 75 காப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் காப்பிணி பெண்களுக்கு வளையல், பூ, பொட்டு உள்ளிட்டவைகளை வழங்கினார்கள்.
பின்னார், மருத்துவ முகாமில் சாக்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிப்பதை நேரில் பார்வையிட்டு, சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பின்கள் தவமணி பழனியப்பன், மரியராஜ், ரங்கநாயகி, பார்த்திபன், வைரமுருகன், தமிழ்ச்செல்வன், பாபு, சரண்யா, அம்பிகா தனபால், கற்பகம், சித்ரா வெள்ளிங்கிரி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.87 குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் துவக்கி வைத்து, மருத்துவ முகாமினை பார்வையிட்டார். உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.