கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் கைப்பற்றியது அதிமுக….!

வெள்ளலூர் பேரூராட்சி தலைவராக அதிமுக மருதாச்சலம், துணைத் தலைவராக அதிமுக உறுப்பினர் கணேசன் தேர்வு செய்யப்பட்டனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் வெற்றி பெற்று பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி கைப்பற்றியது, அதே போல் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சியை திமுகவும், ஒரு பேரூராட்சியை சுயேட்சை வேட்பாளர்களும் கைப்பற்றினர்.

ஆனால், வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக அதிக கவுன்சிலர்கள் இருந்தாலும் கைப்பற்ற முடியாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட 62 இடங்களுக்கான மறைமுகத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக - 8 இடங்களிலும், திமுக - 6 இடங்களிலும், சுயேட்சை - 1, வெற்றி பெற்றது. இதனால் கடந்த மார்ச் 4ம் தேதி நடந்த தலைவருக்கான மறைமுக தேர்தலின் போது திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல, மதியம் துணைத் தலைவர் தேர்தல் நடந்த போது வாக்கு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதால் துணைத் தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதனால் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் பேரூராட்சி அலுவலகம் அருகே இரு கட்சியினரும் கூடினர். அப்போது தேர்தலில் கலந்து கொள்ள திமுக- அதிமுக கவுன்சிலர்கள் வந்த போது, திமுக -அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வெள்ளலூர் 4வது வார்டு திமுக உறுப்பினர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. இதையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், அவர் ஆம்புலென்ஸில் ஏறாமல் சாலையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் வாகனம் மீது நடந்த தாக்குதலில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர். மேலும் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் நடத்திய தடியடியில் பார்த்திபன் என்பவரது மண்டை உடைக்கப்பட்டது. மேலும் ராஜேந்திரன் காலில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற நிலையில் திமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் ஒருவர், திமுக நிர்வாகிகளை தாக்கிய அதிமுகவினரை கைது செய்த பிறகு தேர்தலை நடத்தக் கோரி வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், காலையில் நடைபெற்ற வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மருதாச்சலம் வெற்றி பெற்றார். மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் கணேசன் போட்டியின்றி வெற்றி பெற்றார். கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் அதிமுக ஒரே ஒரு பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பேரூராட்சி தலைவர் மருதாசலம் கூறியதாவது:-

நீதி வென்றுள்ளது. இந்த முறை அதிகாரிகளும் நேர்மையாக நடந்து கொண்டனர். மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளை செய்ய உள்ளோம், எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...