மேலும், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 25.3.2022 நேற்று வேடப்பட்டியில் நடைபெற்றது.
கோவை: வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஏழு நாட்கள் சிறப்பு முகாம் வேடப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வருகின்றது.
இதில் நான்காம் நாள் நிகழ்வாக சாலையில் இருபுறமும் இருந்த முள்செடிகளையும் களைகளையும் அகற்றினர்.
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் 25.3.2022 (வெள்ளிக்கிழமை) நேற்று வேடப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நம்பியழகன் பாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் காலை 9.00 முதல் நடைபெற்றது.
இதில் மருத்துவமனையின் சார்பாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, விக்ரெக்டமி அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான கண் அறுவை சிகிச்சை, விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை, விழித்திரை போன்ற நோய்க்கான சிகிச்சைகளும், அதற்கான மேல் மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆலோசனைகளும், உதவிகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டன. இதில் 130க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மதியம் 2 மணி அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பேணுதல் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமும் அதற்கான கருத்தும் பசுமை தேசம் எஸ்.ராஜேந்திரன் கூறினார்.
அவர் கூறும்போது, மக்கள் தொகை பெருகுவதால் நாட்டில் இயற்கை வளம் குறைந்து கொண்டே செல்கின்றது. இயற்கையை பாதுகாக்க பறவைகளும், வனவிலங்குகளும் பாடுபடும் போது மனிதனாகிய நாம் ஏன் பாடு படக்கூடாது என்றார். அதுமட்டுமின்றி உடல் நலம் பேணுவதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
இறுதியாக ஆன்மீகம் என்னும் விதையில் இருந்து அறிவியல் என்னும் விருட்சம் முளைத்தது என்றார். நாட்டு நலப்பணி மாணவர்கள் நம்பியழகன் பாளையத்தில் உள்ள பேரூராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்து, குழந்தைகளுக்கு கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சுவர்களில் வர்ண ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

