கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய நிலையில், அங்கு கூடிய திமுக - அதிமுகவினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய நிலையில், அங்கு கூடிய திமுக - அதிமுகவினர் இடையே மீண்டும் மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறாத இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, இன்று கோவை வெள்ளலூர் பஞ்சாயத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.வெள்ளலூர் பேரூராட்சியில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அதிமுக - 8 இடங்களிலும், திமுக - 6 இடங்களிலும், சுயேட்சை - 1, வெற்றி பெற்றது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலின் போது திமுக- அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல, அன்று மதியம் துணை தலைவர் தேர்தல் நடந்த போது வாக்கு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டதால் துணை தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், வெள்ளலூர் பேரூராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், பேரூராட்சி அலுவலகம் அருகே இரு கட்சியினரும் கூடத் துவங்கினர்.
அப்போது,தேர்தலில் கலந்து கொள்ள திமுக- அதிமுக கவுன்சிலர்கள் வந்த போது, திமுக - அதிமுகவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால், போலீசார் தடியடி நடத்தி அவர்களைகலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதில், மதுக்கரை நகராட்சி 7 ஆவது வார்டு திமுக உறுப்பினர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், அவர் வண்டியில் ஏறாமல் சாலையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர். இதனால், வெள்ளலூர்பேரூராட்சி தேர்தல் நடக்கும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.