இந்த மையம், மக்கள் எளிதில் தங்களது இல்லத்தில் இருந்து தங்கள் பகுதியின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு சிறப்பு முயற்சியாகும்.
கோவை: கோவை இராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவை 24X7 சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள் என ஒட்டுமொத்தமாக கோவை மாவட்ட மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், குறிப்பாக சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள் என அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கான எடுத்து சொல்லுகின்ற புகார்களுக்கு பதிவு செய்யக் கூடிய ஒரு மையத்தை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி கோவை மாவட்டத்தில் 'கோவை 24X7' என்ற மையத்தை திறந்து வைத்தார்.
கடந்த 20.03.2022 அன்று திறக்கப்பட்ட இந்த மையத்தில் இன்று வரை 1749 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. இந்த அழைப்புகளில் அதிகமாக சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், குடிநீர் தேவைகள் அதேபோல் குப்பைகள் அகற்றுவதற்கான கோரிக்கைகள், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.
அதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியதன் வாயிலாக இந்த அழைப்புகளின் மூலம் வரப்பெறக்கூடிய புகார்களுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பணிகளை பொருத்தவரையில் குப்பைகள் அகற்றுவது என்றால் ஒருநாளில் அதை அகற்ற முடியும், சாக்கடை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் ஒருநாளில் சுத்தம் செய்வதற்கான முன்னெடுப்புகளை அந்த பணிகளை செய்திட முடியும்.
ஆனால், சாலை வசதிகள் குறித்து வரப்பெறுகின்ற புகார்களுக்கு அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்தல், அரசின் ஒப்புதல் பெற வேண்டும் நிதி ஆதாரங்களை உருவாக்கிட வேண்டும். எனவே அதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டு, அந்த புகார்களுக்கும் உரிய தீர்வை எட்டுவதற்கான சிறப்பு முயற்சியாகத் தான் இந்த கோவை 24/7 என்ற சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எளிதில் தங்களது இல்லத்தில் இருந்து தங்கள் பகுதியின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு சிறப்பு முயற்சியாக கோவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மைய அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் நகராட்சி மற்றும் மாநகராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அலுவலகங்கள் திறப்பதற்கான ஆலோசனை செய்யப்பட்டு அதன் பின்னர் முடிவு செய்யப்படும். முதலமைச்சர் கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான திட்டப்பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். அதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அதற்கான நிதி ஆதாரங்களும் வந்து கொண்டு இருக்கின்றன.
எனவே, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் என்பது தான் அரசின் இலக்கு. அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாலை வசதிகளைப் பொருத்தவரையில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட சாலைகள், அதேபோல எந்த விதமான புதிய சாலைகளும் கடந்த ஆட்சியில் போடப்படவில்லை.
இவற்றைக் கருத்தில்கொண்டு முதலமைச்சர் முதற்கட்டமாக ரூ.200 கோடி வழங்கியிருக்கிறார். அதற்கான டெண்டர் பணிகள் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சில சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளையும் சில பணிகளை துவங்க உள்ளோம். வரக்கூடிய காலங்களில் அனைத்து சாலைகளும் விரைவாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
முதலமைச்சரின் இலக்கை பொறுத்தவரைக்கும் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 96 விழுக்காடு மகத்தான வெற்றியை முதலமைச்சரின் ஆட்சிக்கு, சாதனைகளுக்கு பெருமையாக வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறார்கள். முதலமைச்சரின் நல்லாசியோடு கோவை மாநகராட்சியின் மேயர், துணை மேயா் ஆகியோர் பொறுப்பேற்றிருக்கிறார்கள். மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு, அவற்றை வடிவமைக்கும் பணிகளில் மாநகராட்சியின் மேயர் அவர்களும், ஆணையாளர் மற்றும் துணை மேயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள். அதில் நிறைய புதிய அறிவிப்புகள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.