உதவி ஆய்வாளருக்கு எதிராக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வைத்ததால் கோபமடைந்த உதவி ஆய்வாளர் கண்டித்த நிலையில், மனமுடைந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவையில் உதவி ஆய்வாளருக்கு எதிராக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்(27). ஓட்டுனரான நவீன் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையது அலி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்து வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வாலிபர்களுக்கும் உதவி ஆய்வாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நவீன் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், மாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பேசும் வசனமான, "இந்த ஏரியா வேணாம் உன் கண்ட்ரோலில் இருக்கலாம், ஆனால் நான் ஆட்டோ கண்ட்ரோல் செஞ்சிருவேன்" என்ற வசனத்தை வைத்துள்ளார்.
மேலும் அந்தச் ஸ்டேட்டஸில் "dedicate to in pothanur station puthu SI" குறிப்பிட்டுள்ளார். இதனை சிலர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உதவி ஆய்வாளர் சையது அலிக்கு அனுப்பியுள்ளனர்.
இதனைப்பார்த்து கோபமடைந்த உதவி ஆய்வாளர், நவீனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீன், வீட்டிலிருந்த தடைசெய்யப்பட்ட சானிபவுரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் நவீனை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நவீனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவையில் உதவி ஆய்வாளருக்கு எதிராக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.