தற்போது மயக்க நிலையில் உள்ள யானைக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை போளுவாம்பட்டி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 8 வயது பெண் யானைக்கு கால்நடை மருத்துவர் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
கோவை போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில் உடல் நலக் குறைவால் பெண் குட்டி யானை அவதிப்பட்டு வருவதை, ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் நேற்று கண்டறிந்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் யானை நடமாட்டத்தைக் கண்காணித்து கண்டறிந்தனர்.
இதையடுத்து, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி தற்போது சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்தும் யானை கண்காணிப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட ஆய்வில் யானையின் வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதுள்ளது. 90 சதவீதம் நாக்கு அறுபட்டுள்ளது. யானை அவுட்டுகாய் கடித்து வெடித்ததில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மயக்க நிலையில் உள்ள யானைக்கு வலி நிவாரணி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.