உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி அடைப்பைச் சுத்தம் செய்ய தூய்மை பணியாளரை, மேற்பார்வையாளர் கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கத் தொழிலாளியை வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட செல்வபுரம் 78-வது வார்டு பகுதியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களாக சுப்ரமணி, தருமன், செந்தில்குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
அங்குள்ள ஆலமரமேடு பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து, மூவரையும் அடைப்பை நீக்குமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியுள்ளனர்.
சாக்கடைக்கு உள்ளே இறங்காமல் அடைப்பை நீக்க முடியாது என பணியாளர்கள் கூறிய நிலையில், மேற்பார்வையாளர் மாணிக்கம் அடைப்பை நீக்கத்தான் உங்களை பணியில் வைத்துள்ளோம், இறங்கி சுத்தம் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சுப்ரமணி, உரியப் பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி தனது வெறும் கைகளால் குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கியுள்ளார்.
இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, சுப்ரமணி உள்ளிட்ட மூவரையும், தங்களது விருப்பத்தின் பேரில் தான் சாக்கடைக்குள் இறங்கியதாகக் கையெழுத்திட்டுத் தருமாறு மாணிக்கம் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து பேசிய சுப்ரமணி, வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் சிலர் அழைத்து உங்களை வேலையிலிருந்து வெளியேற்றிவிடுவோம் என கூறுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.