மேலும், படியில் தொங்கியபடி பயணிக்க அனுமதித்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தலா ரூ. 600 அபராதம் விதிப்பு.
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருகின்றனர்.
இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வீடு திரும்பும் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்னூர் போலீசார் கோவை சாலையில் பயணிகள் தொங்கியபடி சென்ற பேருந்துகளை தடுத்து நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தலா ரூ.600 அபராதம் விதித்தனர்.
மேலும், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறிய போலீசார் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் எனவும், மீறி பயணித்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவோம் எனவும் உறுதிமொழி ஏற்க செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் படிக்கட்டு ரோமியோக்களுக்கு ஒரு பாடமாகவே உள்ளது எனலாம்.