விழாவில், டி.வி.எஸ். குழுமங்களின் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு நா.மகாலிங்கம் விருது-2022 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கோவை: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 'அருட்செல்வர் மகாலிங்கம்' விருது வழங்கும் விழா நடைபெற்றது.
மார்ச் 21 1923 ஆம் ஆண்டு பிறந்த தமிழகத்தின் முக்கிய தொழில் அதிபரும், மக்கள் சேவகருமான, மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில், 'அருட்செல்வர் மகாலிங்கம்' விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிலதிபர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா கடந்த 17ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதையடுத்து, கல்லூரியில் கலை, இலக்கிய, விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாட்களாக நடந்தது. இந்நிலையில், முக்கிய நிகழ்வாக, அருட்செல்வர் மகாலிங்கம் விருதானது ஒவ்வொரு ஆண்டும், சமுதாயத்திலும், தொழில் துறையிலும் கலை, கலாச்சாரத்திலும் முக்கிய பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். பிரிக்கால் நிறுவனர் விஜய் மோகன், ரூட்ஸ் குழுமத்தின், சேர்மன் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில், டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு நா.மகாலிங்கம் விருது-2022 வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொழில், ஆய்வு, சமூக முன்னேற்றத்தில் அவரின் பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்ட டி.வி.எஸ்., குழுமங்களின் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் பேசுகையில்,
அருட்செல்வர் மகாலிங்கம் விருதினை அவரின் நூற்றாண்டு விழாவில் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அருட்செல்வர் போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியாது. மிக எளிமையான மனிதர். பழக இனிமையானவர். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். மாணவர்கள் தான் நம் எதிர்காலம்.
மாணவர்கள் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது, தொடர்ந்து பல விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஆசிரியர்கள் நினைவு கூற வேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில், கிரியா (Kumaraguru Research and Innovation Alliance) அமைப்பு சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சமூக மாற்றம், புது கண்டுபிடிப்பு துவங்க ரூ.10 கோடி நிதியில் ஆய்வு மையம் துவக்கப்பட்டது. இது தொழில் முனைவோர், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் செயல்பட உள்ளது.
சுற்றுப்புற சூழல், வாழ்வாதாரம், சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.