கூட்டத்தில் ஆலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 பேர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
கோவை: கோவை டிஸ்ட்ரிக்ட் மில் ஒர்க்கர்ஸ் யூனியனின் 48வது மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை டிஸ்ட்ரிக்ட் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் (410) 48வது மகாசபைக் கூட்டம் A.S.குளம், சங்கத்தின் பண்ணைத் தோட்டத்தில் சங்கத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் 20.03.2022ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்தில் ஆலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 பேர் கலந்து கொண்டார்கள். சங்கத்தின் மூத்த தோழர் S.R. கோபால் AITUC கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், பொதுச் செயலாளர் M. ஆறுமுகம் Ex, MLA., அரசியல், ஸ்தாபனம், இயக்கம் சம்பந்தமான வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்று, பின் ஒரு மனதாக அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மகாசபையில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர் P. ஜெகநாதன், துணைத் தலைவர்கள் K. சுப்பிரமணியம், B.Com.,B.L., M.ஈஸ்வரன் (உடுமலை), M.இராமமூர்த்தி (ரங்க விலாஸ் மில்), S.கோபால் (VJ டெரி), S.சின்னராஜ் (தெய்வசிகாமணி மில்), பொதுச் செயலாளர் M.ஆறுமுகம்,Ex-M.LA., செயலாளர்கள் C. சிவசாமி, V.கோபால் (திருப்பூர்)) G.செல்வராஜ் (உடுமலை), V.K. மதியழகன் (C.S & W மில்), K. பொன்ராஜ் (கம்போடியா மில்)) பொருளாளர் N.கிருஷ்ணன் மற்றும் 30 கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1: புலம் பெயர்ந்த பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கு
புலம் பெயர்ந்த பிறமாநிலத் தொழிலாளர்களுக்கான சட்டங்களை தமிழக அரசே அமுல்படுத்து. பிறமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களைத் தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் பதிவு செய்துதான் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று புலம் பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம் அமுலில் இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், நிறுவனங்களும் இந்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்த தலைமைச் சங்க ஆண்டுப் பேரவை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2: வருங்கால வைப்பு நிதி வட்டியை உயர்த்து
வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகைக்கு சென்ற வருடம் கொடுத்து வந்த 55% வட்டியை ஒன்றிய அரசு 8.1% ஆக குறைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பிருந்தபடி வட்டி சதவீதத்தை 12% ஆக உயரத்திக் கொடுக்க வேண்டுகிறோம்.
தீர்மானம் 3: பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கு
தமிழக அரசே! பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம், ஆலையில் இளம் பெண்களின் உழைப்பையும், வாழ்வையும் சூறையாடும் மோசடியை உடனே தடுத்து நிறுத்து, பல மாவட்டங்களிலிருந்து குறிப்பாக தென் மாவட்டங்களிலிருந்து 15 வயது முதல் இளம் பெண்களை ஏஜெண்டுகள் மூலம் பஞ்சாலை முதலாளிகள் கேம்ப் கூலிகளாக வேலைக்கு சேர்த்து கொடுமையான உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. ஆலைக்குள் வருடம் முழுவதும் அடைத்து வைத்து 12 முதல் 15 மரை நேரம் வேலை வாங்கப்படுகிறது. பல ஆலைகளில், ஆலை வளாகத்திற்குள்ளேயே இளம் பெண் தொழிலாளர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை.
மேலும், எந்தவிதமான தொழிலாளர் நலச் சட்ட உரிமைகளும் கிடைக்கப் பெறுவதில்லை. வேலை இடங்களில் தொழிலாளர் தங்கும் விடுதிகளை முறைப்படுத்தும் தமிழக அரசின் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆலை நிர்வாகமும் இவ்வாறு தொழிலாளர்களை தங்க வைத்து வேலை வாங்குவதற்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். கொங்கு மண்டலத்தில் 99% ஆலைகள் சட்டப்படி பதிவு செய்து கொள்ளாமல் கேம்ப் கூலிகளாக தொழிலாளர்களை வைத்து நடத்தி வரும் உழைப்புச் சுரண்டலை சமூகநலத் துறையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதை மாநில அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று இந்தப் பேரவை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4: தொழிலாளர் துறையை தமிழக அரசே சீர்படுத்து
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத் துறையில் பணிக்கொடை வழக்குகள், தொழிலாளர் விபத்து இழப்பீட்டு வழக்குகள், சம்பள பாக்கி வழக்குகள், தற்காலிக வேலை நீக்க அலவன்ஸ் வழக்குகளை நடத்துவதற்கு முறையான அதிகாரிகள் யாருமில்லை. இந்த வழக்குகளை நடத்த தற்காலிகமாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் தங்கள் பணிச்சுமையைக் காரணம் காட்டி வழக்குகளை பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுள்ளனர். தமிழக அரசு உடனே தலையிட்டு பதவிகளை உடனே பூர்த்தி செய்து தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்க முன்வர வேண்டும் என்று இந்தத் தொழிலாளர் பேரவை தமிழக அரசைச் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5: N.T.C ஆலைகளை உடனே திறந்து முழுச்சம்பளம் வழங்கு
தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான (INTC) ஆலைகள் பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன. மூடப்பட்ட ஆலைகளைத் திறந்து ஓட்ட, தொழிற்சங்கங்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக (வங்கி, இன்சூரன்ஸ் BSNL) தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையைப் பின்பற்றி வருவதால் NTC ஆலைகளைத் திறப்பதில் தொழிற்சங்கங்களின் மாற்று யோசனைகளை நிராகரித்து வருகிறது. மூடப்பட்ட ஆலைகளைத் திறந்திட ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், மூடப்பட்ட காலங்களுக்கு அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுச்சம்பளம் வழங்க வேண்டும் என்று இந்த தொழிலாளர் பேரவை கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6: அன்னூர் பகுதியில் லோக்கல் ஆபீஸ் செயல்பட நடவடிக்கை எடு
அன்னூர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அன்னூர், கோவில்பாளையம் ஆகிய இரு இடங்களில் ESI டிஸ்பன்சரிகள் செயல்பட்டு வருகிறது. லோக்கல் ஆபீஸ் வரவேண்டுமென்றால் கோயம்புத்தூருக்குத் தான் வர வேண்டும். எனவே, அன்னூர் பகுதியில் ESI லோக்கல் ஆபீஸ் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் 7: மாதாந்திர பென்சன் தொகையை உயர்த்தி வழங்கு
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பென்சன் தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000/- எனவும், அதிகபட்சம் அவர்கள் பெற்றுவருகின்ற பென்சன் மற்றும் பஞ்சப்படி தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும்.
தீர்மானம் 8: பஞ்சாலைகளுக்குத் தேவையான பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்து
தமிழக அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் பஞ்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள், ஆண்டுக்கு 120 இலட்சம் பேல்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், பருத்தி உற்பத்திக்கான ஊக்கத்தையும், அதற்கான சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும். இந்திய காட்டன் கார்ப்பரேசன் கழகத்தின் கிளை ஒன்றை, தமிழகத்தில் நிறுவ வேண்டும்.
தீர்மானம் 9: ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் உயர் மருத்துவ சிகிச்சை வழங்கிடு
கோவையில் இயங்கி வரும் ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அதிஉயர் மருத்துவ சிகிச்சை, அனைத்து விதமான நோய்களுக்கும் அனைத்து வசதிகளும் உள்ளிட்ட மருத்துவக் கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.