மனு அளிக்க வந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
கோவை: போக்கியத்திற்கு வீட்டினை கொடுத்துவிட்டு ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் சுதா என்கிற கனிமொழி என்பவர் தனக்குச் சொந்தமான வீட்டினை நான்கு குடும்பத்தாருக்குப் போக்கிய ஒப்பந்த அடிப்படையில் 28 லட்சத்துக்கும் அதிகமாகத் தொகையினை பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒப்பந்தத்தில் உள்ள போதே வீட்டினை வேறொருவருக்கு விற்பனை செய்ததோடு வீட்டினை வாங்கியவர் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். மேலும் சரிவரத் தவணை தொகை தராததால் வங்கி நிர்வாகம் வீட்டினை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து போக்கிய தொகையினை திரும்பக் கேட்டு சுதாவை அணுகிய போது தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த வாடகைதாரர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துக் கடந்த செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை தங்கள் பணம் கிடைக்காததால் உரிய நடவடிக்கை கோரி தங்கள் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு அளிக்க வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.