இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: குரும்ப பாளையம் அருகே டீசல் டேங்கர் லாரி - டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளானைப்பட்டி கைக்கோளாம்பாளையம் வண்ணான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(67). இவரது மகன் அருண்(19). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.
இவர்கள் இருவரும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர். மாணவர் அருண் வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, குரும்ப பாளையம் டூ காளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே அசுர வேகத்தில் வந்த டீசல் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் வந்த லாரி கல்லூரி மாணவர் ஓட்டி வந்த டூவீலர் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் அருண் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வேகத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்துள்ள இருவரையும் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்துள்ளனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் அருணை அனுமதித்தனர். இந்நிலையில் அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் டீசல் டேங்கர் லாரி டிரைவர் மாணிக்கத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டீசல் டேங்கர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.