கோவையில் பள்ளிகளில் நடைபெற்று வரும் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டு பெற்றோருடன் கலந்துரையாடினார்.
கோவை: பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
இன்று பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 1203-அரசுப் பள்ளிகளில் இக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதில் ஒரு பகுதியாக சீரநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கலந்து கொண்டார். அவரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி குறித்தும் தேவைகள், மாணவர்களிடம் தேவைகள் குறித்தான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பெரும்பாலானோர் பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு, திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.சிலர் அரசு பள்ளி சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த முறையில் மாணவர்களுக்குப் பாடம் கற்று கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் பெற்றோர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறைகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களே சமூகத்துடன் இணைந்து வாழ கற்றுக் கொள்வதாகவும் அரசு பள்ளி மாணவர்களே பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டுவதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்கள் புகார் பெட்டியையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த கூட்டத்தின் நோக்கம் என்பது, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும், ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் பெற்றோர் ஆசிரியர் குழுவின் ஒருவர் தலைவராகவும் 6-பெற்றோர்கள் 4-ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகள் இரண்டு பேர் என20-உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், பள்ளி மேலாண்மை, பள்ளிக்குத் தேவையானவை குறித்து ஆய்வு செய்யலாம் எனவும் மூன்று வருடத்திற்குத் தேவையான திட்டத்தை உருவாக்கலாம் என தெரிவித்தார்.
தற்போது நடைபெற்ற கூட்டத்தில் பெற்றோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்றும் பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பள்ளியில் படித்த பெற்றோர்களே அவர்களின் குழந்தைகளையும் இங்கே படிக்க வைத்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.