பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் 4 அடி உயரம் கொண்டவை என்றும் அவற்றின் மதிப்பு ரூபாய். 80 லட்சம் இருக்கும் என்றும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர்: திருப்பூர்வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன், சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர்கள் முருகன், வீரப்பன் ஆகியோர் பின்னலடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களிடம் கம்பம் பகுதியில் இருந்த நபர் ஒருவர் அறிமுகமாகி தன்னிடம் யானைத் தந்தங்கள் இருப்பதாகவும், அதை விற்று தருமாறு கூறி நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து மூலமாக அவிநாசியப்பனுக்கு தந்தங்களை அனுப்பி உள்ளனர். அதைப் பெற்றுக்கொண்ட அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, தந்தங்களை விற்பதற்கு முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு யானை தந்தங்கள் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தனிப்படை அமைத்து வன அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போது, அவிநாசியப்பனிடம் யானை தந்தங்கள் இருப்பதாக சந்தேகம் அடைந்தனர்.
அதை உறுதிப்படுத்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் யானை தந்தங்களை வாங்குவது போல அவிநாசியப்பனிடம் பேசி அதனை காட்ட வரும்படி கூறியுள்ளார். மேலும், ரூபாய்80 லட்சம் வரை விலை நிர்ணயித்த பின்பு செந்தில்குமாருக்கு அவிநாசியப்பன் யானை தந்தங்களை காட்டியுள்ளார்.
அப்போது, அவனிடம் யானைத் தந்தங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் வீரப்பன், முருகன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 4 அடி உயரமுள்ள 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்களுக்கு யானை தந்தம் கொடுத்த நபர் குறித்தும், இறந்த யானையில் இருந்து தந்தங்கள் வெட்டப்பட்டதா? இல்லை தந்தங்களுக்காக யானை கொல்லப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில்வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.