பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்க வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.15.32 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கும் அவர் நன்றி பாராட்டினார்.
கோவை: 2022-23க்கான தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பருத்தி சாகுபடிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சைமா வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் தமிழக ஜவுளித் தொழிலின் மூலம், அறுபது இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். தமிழக ஜவுளித் தொழிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு 120 இலட்சம் பேல்கள் (பேல் ஒன்றுக்கு 170 கிலோ) பருத்தி பஞ்சு தேவைப்படுகிற நிலையில், மாநிலத்தில் ஐந்து இலட்சம் பேல்கள் மட்டுமே உற்பத்தியாகிறது.
ஆகையினால், மாநிலத்தில் உள்ள நூற்பாலைகள் ஒரு கிலோ பருத்தி பஞ்சுக்கு ரூ.3.00 முதல் ரூ.6.00 வரை இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வர போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. டீசல் விலையும் உயர்வதால் போக்குவரத்து செலவு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.
ஆகவே, தமிழகத்திலேயே பருத்தி பஞ்சு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சைமா கோரி வந்துள்ளது. இதனை ஏற்று, தமிழக முதலமைச்சர் பருத்தி சாகுபடி வளர்ச்சி இயக்கத்தை தொடங்கி மாநிலத்தில் பருத்தி வளா்ச்சியை ஊக்குவித்து வருகிறார்.
இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா தலைவர் ரவி சாம், மாநில வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு ரூ.33,007.68 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இது விவசாயிகளுக்கு, குறிப்பாக பருத்தி விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும் என்றும் கூறியுள்ளார். பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்க வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரூ.15.32 கோடி ஒதுக்கீடு செய்தமைக்கும் அவர் நன்றி பாராட்டினார். இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஹெக்டேருக்கு 1500 கிலோவுக்கு மேல் பருத்தி விளைகிறது.
அதே நேரத்தில், உலக சராசரியான 805 கிலோவிற்கு பதிலாக நமது மாநிலத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு வெறும் 594 கிலோ பருத்திதான் விளைகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார். பருத்தி தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் சைமா பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம் (SIMA CD & RA) வேளாண்மைத் துறையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
பருத்தி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பருத்தி உற்பத்தியை ஐந்தாண்டுகளில் தற்போதைய 5 இலட்சம் பேல்களில் இருந்து 15 இலட்சம் பேல்களாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ரவி சாம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், தமிழக அரசு பருத்தி, கூடுதல் நீண்ட இழை பருத்தி சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை செயல்படுத்த மரபணு ரீதியாக தூய பருத்தி விதைகளை வழங்கி சைமா பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
சூரிய சக்தியில் இயங்கும் 3000 பம்பு செட்டுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததைப் பாராட்டிய ரவி சாம், இதன் மூலம் விவசாயிகள் பலன் அடைவதோடு, இலவச மின்சாரம் மூலம் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையும் குறையும் என்று கூறினார். மின்வாரியத்தின் நஷ்டத்தை குறைக்கும் வகையில் சூரிய சக்தி பம்புசெட்டுக்கான ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்கலாம் என்றும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்களை பயன்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்தது, விவசாயிகளின் நிகர வருவாயை அதிகரிக்க பெரிதும் பயன்படும் என்றும், பருத்தியை பொருத்தவரையில் பேட்டரி மூலம் இயக்கப்படும் பருத்தி பறிக்கும் இயந்திரத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் சைமா தலைவர் கூறினார்.
விவசாயிகளுக்கு மண்ணின் நிலையை மேம்படுத்தவும், தண்ணீரை சேமிக்கவும், பருத்தி விதைப்பு, அறுவடையை சரியான நேரத்தில் திட்டமிட்டு சிறந்த வருவாய் எட்ட இயந்திரமயமாக்கல் உதவும் என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் விவசாயம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை மையம் உருவாக்கம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் சைமா தலைவர் பெரிதும் வரவேற்றுள்ளார்.