தமிழகத்தில் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவையில் மெட்ரோ திட்டத்தை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் மெட்ரோ திட்டத்தை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி அரங்கில் மோடி மகள் திட்டத்தின் கீழ், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பாஜக மக்கள் சேவை மையத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட தந்தை இழந்த பெண் குழந்தைகளுக்கு இரண்டாம் வருடத்திற்கான 10-ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 115-குழந்தைகள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். இது மட்டுமல்லாமல் மத்திய அரசின் நலத்திட்டங்களையும் இவர்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவர்களின் பெரும்பாலான குழந்தைகளின் தந்தை குடிப்பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு பாதித்த குடும்பங்களை அரசு பொறுப்பிலே சேரும், டாஸ்மாக் நடத்தி வருமான பெரும் அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குடும்பங்களின் செலவை ஏற்க வேண்டும்.
மதுவிலக்கு என்பதே பாஜகவின் நிலைப்பாடு முழுமையாக மதுவிலக்கு வர வரைக்கும் நாங்கள் கோரிக்கை வைப்போம். மாநகராட்சி சாலைகள் மிக மோசமாக உள்ளது. கோவையில் சாலைகளில் பயணிக்க முடியாத நிலை உள்ளது.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி முடிக்கப்பட்ட பணிகளில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. குளங்களில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அள்ள வேண்டாம். சாலைகள் போட வேண்டாம். கொலுசு கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள் போல. காஷ்மீர் பைல்ஸ் படம் காஷ்மீரில் சிறுபான்மை மக்களில் துயரத்தைப் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் மக்களைப் பற்றி எடுக்கப்பட்ட படமாகவும், இத்திரைப்படத்தை முதல்வர் பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்கள் போன்று தமிழகத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் கோவை மெட்ரோ எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் பைல்ஸ் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. எந்த சமூகத்தையும் இழிவு படுத்தவில்லை. சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் மீது வைக்கப்படும் மிரட்டல் அச்சுறுத்தலுக்கு பாஜகவினர் பயப்படப்போவதில்லை.
உயிருக்கு அச்சம் இருக்கும் சூழலிலும் மக்களுக்குப் பணி செய்தவர்கள் நாங்கள். முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதும், வழக்குகள் பதியப்பட்டு குற்றவாளிகள் போல் நடத்தப்படுவது அரசியல் உள் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இங்கு ஆக்கப்பூர்வமான செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் இருக்கிறது. ஆனால் அதை செய்யாமல் அவர்களின் பழைய கணக்கைத் தீர்த்து வருகிறார்கள். உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் இங்கு படிக்க முடியுமா? முடியாதா? பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார்.