செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-வயது முதல் 14-வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா (கோர்பிவேக்ஸ் - CorBEVax) தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (16.03.2022) தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி மிகவும் அவசியமானதாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசிகள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியன அனைத்து அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 99.4 சதவீதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 88.1 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15- 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இதுவரை 1,31,066 சிறுவர்களுக்கு முதல் தவணை மற்றும் 1,02,683 சிறுவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தவணையாக மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 46,898 நபர்கள் பயனடைந்துள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 24 முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 17.84 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.
தற்போது 12 - 14 வயதில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரத்தியேகமாக கோர்பிவேக்ஸ் (CorBEVax) தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1,02,200 (12-14 வயதிற்குட்பட்ட) சிறார்கள் பயனடைய உள்ளார்கள். இந்த தடுப்பூசி 16.03.2022 இன்று முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாம் தவணை 28 நாட்கள் கழித்து வழங்கப்படவேண்டும். இதற்காக 1,04,100 டோஸ் தடுப்பூசிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.