தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 1.02 லட்சம் டோஸ் ஊசிகள் தயார் நிலையில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கும் பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 18 வயதைத் தாண்டிய இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதைக் கடந்தவர்களுக்கு 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது. இந்த புதிய தடுப்பூசியின் பெயர் ‘கோர்பேவேக்ஸ்’. 12 வயது பூர்த்தியான சிறுவர்கள் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டம் முதல் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல 60 வயதைக் கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் இன்று முதல் செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறும் போது:-
கோவை மாவட்டத்தை பொருத்தவரை 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நேரடியாக அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதற்காக ஒரு லட்சத்து, 2,200 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. வட்டாரத்திற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதைத்தவிர 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.