என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக எங்கேயும் இல்லாத அளவிற்கு முழுமையான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை இது, இன்று ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: இரண்டாவது முறையாக எங்கேயும் இல்லாத அளவிற்கு முழுமையான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர் உள்ளிட்ட 13-பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தமிழகம் முழுவதும் 59- இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் காலை 6.30-மணிக்கு துவங்கி இரவு 7.30-மணியளவில் சோதனை நிறைவடைந்தது.
இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் கிளம்பிய போது அதிமுக தொண்டர்கள் கூடி வாசலில் நின்றதால் அதிகாரிகள் செல்ல முடியவில்லை, இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறும் போது:-
என்னுடைய வீட்டில் இரண்டாவது முறையாக எங்கயும் இல்லாத அளவிற்கு முழுமையான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை இது. முதலமைச்சரை அரசியல் ரீதியாக எதிர்பவர்கள், தேர்தலில் சிறப்பாகப் பணி செய்தவர்கள் மீது ரெய்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் நடந்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை, இன்று ஒரு ரூபாய் கூட கைப்பற்றவில்லை.
சோதனையை சட்டரீதியாகச் சந்திப்போம். திமுகவினர் ரெய்டு மூலமாக வேலை செய்யாமல் இருக்க முயற்சி செய்கிறார்கள். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரலாம் என கடந்த முறையே முதல்வர் முயற்சி செய்தார். ஆனால் எதும் முடியவில்லை, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 85-ஆயிரம் ஒட்டுகள் போடப்பட்டுள்ளது. ஆனால் 70- கொரோனா நோயாளிகள் தான் இருந்தாங்க. முதலமைச்சர் மேடையில் ஒரு மாதிரி பேசுகிறார், பழிவாங்கும் நோக்கில் தான் செயல்படுகிறார். காவல்துறை ஏவுகணை தான், காவல்துறை அதிகாரிகள் நடு நிலையுடன் இருக்க வேண்டும், திமுகவிற்கு அடிமையாகப் போக வேண்டாம். ஊடகங்கள் உண்மையைத் தெரிந்து போட வேண்டும் கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.