கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள காரணத்தால் இரவு நேரங்களில் விமான நிலையம் மூடப்பட உள்ளது.
கோவை: ஏப்ரல் முதல் இரவு நேரங்களில் கோவை சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள காரணத்தால் ஏப்ரல் முதல் இரவு நேரங்களில் விமான நிலையம் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது:-
விமான நிலையங்களில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓடுபாதை புனரமைக்கப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் இந்த பணிகள் துவங்கப்பட உள்ளன.
இதன் காரணமாக இரவு நேரங்களில் குறிப்பாக இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். இதன் காரணமாக விமான நிலையம் இரவு நேரத்தில் செயல்படாது. தற்போது இரவு 11.15 மணி வரை விமானப் போக்குவரத்து உள்ளது.
கோவையில் இருந்து டெல்லி புறப்படும் விமானம் தினமும் இயக்கப்படும் கடைசி விமானமாகும். மீண்டும் அதிகாலை 3.30 மணிக்கு 'ஏர் அரேபியா' நிறுவனத்தின் விமானம் ஷார்ஜாவில் இருந்து கோவையில் தரையிறங்கும். மீண்டும் அதிகாலை 4.00 மணிக்கு கோவையில் இருந்து ஷார்ஜா புறப்பட்டு செல்லும். ஓடுபாதை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள காரணத்தால் ஏப்ரல் முதல் இரவு 10.00 மணிக்கு முன் வரை மட்டுமே விமான சர்வீஸ் வழங்கப்படும். மீண்டும் அதிகாலை 4.00 மணிக்கு மேல் மட்டுமே விமான போக்குவரத்து துவங்க அனுமதிக்கப்படும்.
இதனால், இரவு மற்றும் அதிகாலை இயக்கப்படும் விமான போக்குவரத்து நேரங்களில் மாற்றம் ஏற்படும். ஓடுபாதை புனரமைப்பு பணி முடிந்த பின் மீண்டும் வழக்கம்போல் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விமானங்கள் இயக்கப்படும். விமான நிலையமும் 24 மணி நேரமும் செயல்படும். இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.