சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வபுரம் போலீசார், கொலை தொடர்பாக செல்வபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை: கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரது மகன் சசிகுமார் (35).இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். மேலும், பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரசொல்லி அழைத்துள்ளனர். அப்போது, வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, சசிக்குமாரின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அவரது அவரது உறவினர்கள், அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் போலீசார், சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலை தொடர்பாக செல்வபுரத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், சசிக்குமாரின் சலூன் கடையில் அவர்கள் இருவரும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கலில், ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.