தென்மண்டல துணைவேந்தர் கூட்டத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 6-துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கோவை: 2047-ல் உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்கத் திட்டமிட வேண்டும் என தென்னக துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆளுநர் தொரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 6-துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி,

இங்கே வந்துள்ள துணை வேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள் என பாராட்டினார். கல்வி என்பது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும் எனவும், அதனால் நாம் அனைவரும் உயர்கல்வியை மாற்றி அமைக்கப் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். சுமார் 65-ஆண்டுகளாகத் தான் இந்தியா என அழைக்கிறோம் என கூறினார். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாகத் தான் இருந்தோம் எனவும் கூறினார்.
அரசுகள் 5-ஆண்டுகள் தான் இருக்கும், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள் அது அடுத்த 3-ஆண்டுகளுக்குத் தொடரும் எனவும், பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது என தெரிவித்தார்.

அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன எனவும், 5-ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை எனவும் கூறினார். 2014-ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் பார்வை மாறியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது எனவும் தெரிவித்தார். செப்பு மொழி 18-உடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2014-ல் 400-புதிய நிறுவனங்கள் மட்டுமே இருந்தது என கூறிய அவர் 2022ல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். 2047-ம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், 2047-ல் நம் இலக்கு என்பது உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் எனவும் இதை வைத்து துணைவேந்தர்கள் யோசித்து அனைவருக்கும் பயன்படும் வகையில் திட்டமிடல் செய்ய வேண்டும் என கூறினார்.
கடந்த 20-ஆண்டுகளில் 30-ஆயிரம் முனைவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்து இருக்கின்றனர் என்றும், மாணவர்களின் ஆராய்ச்சி மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் எனவும் சில தலைவர்கள் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிப்பதால் யாருக்கும் பயனிருக்கப் போவதில்லை எனவும் கூறினார்.