மேலும், இதே போல் பலரிடம் சுமார் 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தன்யா மற்றும் நண்பர் பிரதீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையை அடுத்த சூலூர் எஸ்.எல்.எஸ்., நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் முருகன் (25) இவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து உள்ளார். அரசு வேலைக்காக தேர்வுகள் எழுத தயாராகி வருகிறார்.
மேலும், பகுதி நேரமாக மாலை நேரத்தில் பாஸ்ட்புட் கடை ஒன்றை சூலூர் பகுதியில் நடத்தி வருகிறார். இவருக்கு சூலூர் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் பிரதீப் என்பவர் நண்பர் ஆவார்.
இந்நிலையில், பிரதீப் முருகனிடம் தனக்குத் தெரிந்த இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர் தன்யா என்பவர் பல ஆண்டுகால அனுபவம் உள்ளவர் என்றும், மத்திய மாநில அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்தால் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, முருகனும் பிரதீப்பும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தன்யாவின் வீட்டிற்கு சென்று பேசினர்.

முருகனுக்கும், அவரது தம்பி வெள்ளை பாண்டிக்கும் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக தன்யா உறுதி அளித்துள்ளார். இதற்காக 15 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த மாதம் வரை நேரிலும், வங்கி பரிவர்த்தனை மூலமும் மூன்று தவணைகளாக 15 லட்ச ரூபாயை முருகன் தன்யாவுக்கு கொடுத்துள்ளார். பின்னர் முருகன் தன்யாவை சந்தித்து எப்போது வேலை கிடைக்கும் என பலமுறை கேட்டு வந்தார். ஆனால் அவர் சரியான பதில் அளிக்காமல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வந்துள்ளார்.
இதனையடுத்து, விசாரித்தபோது தன்யா இஎஸ்ஐ மருத்துவமனையில் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் கேட்கும் போது தன்யா தனக்கு கோவை காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நன்கு பழக்கமானவர்கள் எனவும், யாரிடம் புகார் தெரிவித்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இதே போல் பலரிடம் சுமார் 40 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்துள்ளதாகவும் முருகன் தெரிவித்தார்.
புகாரின் பேரில், போலீசார் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தன்யா மற்றும் பிரதீப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்யா, பிரதீப் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.