கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரை கொலை செய்த வழக்கில், அவரது நண்பர் மற்றும் உடந்தையாக இருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் முதன்மை கூடுதல் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரை கொலை செய்த வழக்கில், அவரது நண்பர் மற்றும் உடந்தையாக இருந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் முதன்மை கூடுதல் நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன் உத்தரவிட்டார்.
கோவை இருகூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவரும் சூலூரை சேர்ந்த சதீஷ்குமாரும் (29) ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். பின்னர், முருகானந்தம் இருகூரில் தனியே நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், சதிஷ் குமார், 2019-ல் ரூ.4 லட்சம் அளித்து, பங்குதாரராக இணைத்துக் கொள்ள கேட்டுள்ளார். அதற்கு, முருகானந்தம், முதலில், அந்த நிறுவனத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றும் படியும், பின்னர் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சதீஷ்குமார் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
ஆனால், ஏற்கெனவே அளித்த தொகை குறித்தும், சம்பளம் வழங்காமல் முருகானந்தம் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதனால், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்ட சதீஷ்குமார், அதே நிறுவனத்தில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் உதவியை கோரியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 நவம்பர் 19-ம் தேதி சதீஷ்குமார், முருகானந்தம் ஆகிய இருவரும் மது அருந்திய பின்னர், முருகானந்தத்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சதிஷ்குமார், முருகானந்த்தை தலையைணையை கொண்டு அழுத்தியும், படுக்கை விரிப்பில் கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். கொலைக்கு உடைந்தையாக சந்திரன் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் சதீஷ்குமார், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சதீஷ்குமார், சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.